புனிதர்கள்

புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர்

✠ புனிதர் சூசையப்பர் ✠
(St. Joseph)

அருள்நிறை கன்னி மரியாளின் கணவர் :
(Spouse of the Blessed Virgin Mary)

பிறப்பு : கி.மு. 39/38
நாசரேத்து

இறப்பு : கி.பி. 21/22
நாசரேத்து (பாரம்பரியம்)

நினைவுத் திருவிழா : மார்ச் 19 (கத்தோலிக்கம்)

பாதுகாவல் :
தந்தையர், நற்படிப்பு, தொழிலாளர்கள், நல் மரணம்,
அனைத்துலக கிறிஸ்தவ திருச்சபைகள்

புனிதர் சூசையப்பர் (Saint Joseph), இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தை ஆவார். புனித அருள்நிறை கன்னி மரியாளின் கணவரான இவர், பாரம்பரிய கிறிஸ்தவ பிரிவுகளில் மிகப் பெரிய புனிதராக வணங்கப்படுகிறார்; பெருந்தந்தையர்களில் (Patriarch) ஒருவராகவும் மதிக்கப்படுகிறார்.

புனிதரின் வாழ்வு :
சூசையப்பர், தாவீது அரசரின் வழிமரபில் தோன்றியவர். இவரது தந்தையின் பெயர் ஏலி என்கிற யாக்கோபு ஆகும். நாசரேத்தில் வாழ்ந்து வந்த சூசையப்பர், தச்சுத்தொழில் செய்து வந்தார். தாவீது குலத்து கன்னிப் பெண்ணான மரியாளுடன் இவருக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டது. அவ்வேளையில், மரியாள், தூய ஆவியின் வல்லமையால் இறைமகனைக் கருத்தாங்கும் பேறு பெற்றார். மரியாள் திடீரென கருவுற்றதால் சூசையப்பர் குழப்பம் அடைந்தார். நேர்மையாளரான இவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்கிவிட நினைத்தார். மரியாள் கடவுளின் திருவுளத்தால் இறைமகனை கருத்தாங்கி இருப்பதை வானதூதர் வழியாக அறிந்த இவர் மரியாளை ஏற்றுக்கொண்டார்.
இயேசு, பெத்லகேம் மாட்டுத் தொழுவத்தில் பிறந்த வேளையிலும், அவரைக் ஆலயத்தில் ஒப்புக்கொடுக்க எருசலேம் சென்ற நேரத்திலும், ஏரோது அரசன் அவரைக் கொல்லத் தேடியபோதும், மரியாளையும், குழந்தை இயேசுவையும் மிகுந்த அன்புடனும் அக்கறையுடனும் சூசையப்பர் பாதுகாத்தார்.

பன்னிரண்டு வயதில் இயேசு எருசலேம் ஆலயத்தில் தங்கிவிட்டபோது, சூசையப்பர் மிகுந்த கவலையுடன் தேடியலைந்து அவரைக் கண்டுபிடித்தார். தச்சுத் தொழிலில் வந்த வருமானம் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றினார். மரியாளும் நெசவுத் தொழில் மூலம் இவருக்கு உதவினார்.

சூசையப்பர் இயேசுவுக்கும் தச்சுத் தொழிலைக் கற்றுக்கொடுத்தார். மரியாளுக்கு நல்ல கணவராகவும், இயேசுவுக்கு நல்ல தந்தையாகவும் சூசையப்பர் விளங்கினார். சிறந்த வாய்மையும் பொறுமையும் கொண்ட சூசையப்பர், திருக்குடும்பத்தை சிறப்பாகத் தலைமை தாங்கி வழிநடத்தினார். இயேசு தனது இறையரசுப் பணியைத் தொடங்குவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பு, இயேசுவும் மரியாளும் அருகில் இருக்க சூசையப்பர் பாக்கியமான மரணம் அடைந்தார்.