புனிதர்கள்

✠ அருள்நிறை கன்னி மரியாளின் மினவுதல் விழா ✠

(Visitation of the Blessed Virgin Mary)

மரியாள், எலிசபெத்தை (Elizabeth) சந்தித்தல் அல்லது மாதா எலிசபெத்தம்மாளை மினவுதல் என்பது லூக்கா நற்செய்தி 1:39–56ல் விவரிக்கப்படும் ஒரு நிகழ்வாகும். இயேசு பிறப்பின் முன்னறிவிப்பின்போது, தனது உறவினராகிய எலிசபெத்து கருவுற்றிருப்பதை கபிரியேல் தூதர் மூலம் மரியாள் அறிந்தார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட எலிசபெத்து, தம் முதிர்ந்த வயதில் ஒரு மகவைக் கருத்தரித்திருக்கிறார் எனவும் இது அவருக்கு ஆறாம் மாதம் எனவும் கபிரியேல் மரியாளுக்கு அறிவித்திருந்தார்.

இதனால் மரியாள் புறப்பட்டு யூதேய (Judah) மலைநாட்டில், 100 மைல் தொலைவில் உள்ள எலிசபெத்தின் ஊருக்கு விரைந்து சென்றார். மரியாள் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாளின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது அவர் வயிற்றிலிருந்த குழந்தை மகிழ்ச்சியால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டு உரத்த குரலில், “பெண்களுக்குள் நீர் ஆசி பெற்றவர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த்துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என மரியாவை வாழ்த்தினார் என விவிலியம் விவரிக்கின்றது.

எலிசபெத்தின் வாழ்த்துதலைக் கேட்ட மரியாள் கடவுளை போற்றி ஒரு பாடல் பாடினார். அப்பாடல் மரியாளின் பாடல் என அழைக்கப்படுகின்றது.

இந்நிகழ்வு மேற்கு கிறிஸ்தவத்தில், குறிப்பாக கத்தோலிக்க திருச்சபையில் மே 31 அன்றும், கிழக்கு கிறிஸ்தவத்தில் 30 மார்ச் அன்றும் கொண்டாடப்படுகின்றது. இந்நிகழ்வு நடந்த இடத்தில் இப்போது சந்தித்தல் ஆலயம் உள்ளது.

கத்தோலிக்க திருச்சபையில், மரியாள் எலிசபெத்தை சந்தித்த நிகழ்வு, செபமாலையின் மகிழ்ச்சி மறைபொருள்களின் இரண்டாம் மறைபொருள் ஆகும்.

இவ்விழாவில் நான்கு நிகழ்ச்சிகளைக் கொண்டாடுகிறோம்:

  1. கபிரியேல் அதிதூதர் கிறிஸ்துவின் மனித அவதாரத்தை அறிவித்த பின் கன்னி மரியாள் தன் உறவினரான எலிசபெத்தம்மாளைச் சந்திக்க சென்றது.
  2. அவரது உதரத்திலிருந்த ஸ்நாபக அருளப்பர் (John the Baptist) கன்னி மரியாளின் வாழ்த்து மொழிகளைக் கேட்டதும் ஜென்மப் பாவத்திலிருந்து விடுவிக்கப்பட்டது.
  3. பரிசுத்த ஆவியால் ஏவப்பட்ட எலிசபெத்தம்மாள், «பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே» என கன்னி மரியாளைப் பாராட்டியது.
  4. «என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றுகின்றது» என்னும் உயரிய பாடலை மரியாள் இசைத்தது.

எலிசபெத்தம்மாள் எருசலேமிலிருந்து மேல் திசையில் ஆறு மைல் தொலைவில் மலை நாட்டில் வசித்து வந்தார். அவருக்கு உதவி செய்யும்படி கன்னி மரியாள் சென்றார். தன்னைவிட தாழ்ந்த நிலையில் ஒரு பெண்ணுக்கு உதவி செய்யப் போகிறார். அவரை கூப்பிடாமலே தானாகக் செல்கிறார். ஒன்று இரண்டு நாட்களல்ல, மூன்று மாதங்களாக அங்கு தங்கி எல்லா வேலைகளையும் செய்கிறார்.

எலிசபெத்தம்மாள் அவரை வாழ்த்தியதும், தன்னைப்பற்றி பெருமை கொள்ளாமல் கடவுளை வாழ்த்துகிறார் மரியாள். ஏறக்குறைய மூன்று மாதம் எலிசபெத்தம்மாளோடு தங்கியிருந்தபின் வீடு திரும்பினார்.

Ctrl+C புனிதர்கள் வரலாறு