புனிதர்கள்

பதுவை புனிதர் அந்தோனியார்

(St. Anthony of Padua)
மறைப்பணிகளின் மறைவல்லுநர், அவிசுவாசிகளின் சம்மட்டி, கோடி அற்புதர் :
(Evangelical Doctor, Hammer of Heretics, Professor of Miracles)
பிறப்பு : ஆகஸ்ட் 15, 1195
லிஸ்பன், போர்ச்சுக்கல்
(Lisbon, Portugal)
இறப்பு : ஜூன் 13, 1231 (வயது 35)
பதுவை நகர், இத்தாலி
(Padua, Italy)
ஏற்கும் சமயம் :
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
முக்திபேறு மற்றும் புனிதர் பட்டம் : மே 30, 1232
திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி
(Pope Gregory IX)
முக்கிய திருத்தலங்கள் :
புனிதர் அந்தோனியார் திருத்தலம், பதுவை, இத்தாலி
(Basilica of Saint Anthony of Padua, Italy)
நினைவுத் திருவிழா : ஜூன் 13
பாதுகாவல் :
அமெரிக்க பழங்குடியினர் (American Indians); பிரேசில் (Brazil); முதியோர்; நற்கருணை பக்தி (Faith in the Blessed Sacrament); மீனவர்; அறுவடை; குதிரைகள்; தொலைந்துபோன பொருட்கள்; தொலைந்துபோன மக்கள்; தொலைந்துபோன ஆன்மாக்கள்; தபால்; மாலுமிகள்; ஒடுக்கப்பட்டோர்; வறியவர்; போர்ச்சுகல் (Portugal); கர்ப்பிணிகள்; பசியுறுவோர்; பயணம் செய்வோர்; பரிசல்காரர்; லிஸ்பன் (Lisbon); ஃபிரான்சிஸ்கன் சபையினர் கையகப்படுத்தியுள்ள புனித பூமி (Franciscan Custody of the Holy Land); கப்பல் பணியாளர்கள் (Mariners); டிகுவா இந்தியர்கள் (Tigua Indians); சுற்றுலா பணிப்பெண்கள் (Travel hostesses); பயணிகள் (Travellers); டுபுரன் (Tuburan); செபு (Cebu); எதிர்-புரட்சியாளர்கள் ( Counter-Revolutionaries); சேன் அன்டோனியோ டி பதுவா பங்கு (San Antonio De Padua Parish); டைடை (Taytay) (Rizal)
“ஃபெர்னாண்டோ மார்ட்டின்ஸ் டி புல்ஹோஸ்” (Fernando Martins de Bulhões) எனும் இயற்பெயர் கொண்ட, பதுவை புனிதர் அந்தோனியார், போர்ச்சுகீசிய கத்தோலிக்க குருவும், “ஃபிரான்சிஸ்கன்” (Franciscan Order) சபை துறவியும் ஆவார். இவர் “லிஸ்பன்” (Lisbon) நகரில் பிறந்தாலும் ‘பதுவைப்பதியர்’ என்றே அழைக்கப்பட்டார். இதற்குக் காரணம், இத்தாலி நாட்டிலுள்ள “பதுவை” (Padua) நகரில்தான் இவர் தமது கடைசி நாட்களைக் கழித்துள்ளார். அவர் மரித்ததும், அடக்கம் செய்யப்பட்டதும் அங்குதான். ஆகவேதான் “பதுவைப் பதியர்” என அழைக்கப்படுகின்றார். இவரது புனித வாழ்வும், கூரிய நுண்ணறிவும், விவிலிய ஆர்வமும் இவர் மரித்த மறு வருடமே இவருக்கு புனிதர் பட்டம் பெற்றுத் தந்தது.
வாழ்க்கைக் குறிப்பு :
இளமை :
ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் (Portugal) நாட்டின் தலைநகரான லிஸ்பன் (Lisbon) மாநகரிலே கி.பி. 1195ம் ஆண்டு, ஆகஸ்ட் திங்கள், 15ம் நாள் பிறந்தார். அவரது பெற்றோர்கள் “வின்சென்ட் மார்டின்ஸ்” (Vicente Martins), மற்றும் “தெரெசா பைஸ் டவேய்ரா” (Teresa Pais Taveira) ஆவர். இவர்களுக்கு முன்றாவதாகப் பிறந்த குழந்தையான இவர் கூரிய நுண்ணறிவு படைத்தவர் ஆவார்.
புனித அகுஸ்தீன் சபையில் :
(Augustinian Abbey of Saint Vincent)
ஆன்மீக குருவைக் கலந்தாலோசித்து புனித அகுஸ்தின் துறவற சபையில் சேர்ந்தார். ஊர் உறவினரை விட்டு விலகியிருப்பதே நலம் என்று உணர்ந்த ஃபெர்னாண்டோ தனது விருப்பத்திற்கிணங்க அதிபரின் அனுமதியின்படி, அப்போதைய போர்ச்சுகலின் தலைநகரான “கொயிம்ப்ரா” (Coimbra) என்னும் நகருக்குச் சென்று குருத்துவக் கல்வி பயின்றார். 1219ம் ஆண்டில் 24ம் வயதில் குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
மொராக்கோவில் (Morocco) வேத சாட்சிகளாக மரித்த ஐந்து ஃபிரான்சிஸ்கன் சபையோரின் திருப்பண்டம், 1220ம் ஆண்டு, ஃபெப்ரவரி மாதத்தில் கொண்டு வரப்பட்டது. இதைப் பற்றி சிந்தித்த ஃபெர்னாண்டோ, தாமும் அவ்வாறே கிறிஸ்துவுக்காக வேத சாட்சியாக வேண்டும் என்று தணியாதத் தாகம் கொண்டார். எனவே கி.பி. 1221ம் ஆண்டு புனித அகுஸ்தீன் சபையை விட்டு விலகி, ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தார்.
ஃபிரான்சிஸ்கன் சபையில் :
ஃபிரான்சிஸ்கன் சபையில் சேர்ந்தபோதுதான் ஃபெர்னாண்டோ என்ற பெயரை மாற்றி அந்தோனியார் மடத்தின் பெயரால் அந்தோனி என்ற புதிய பெயர் பெற்றுக்கொண்டார். சிறிது காலம் ஆப்பிரிக்காவிலுள்ள இஸ்லாமியருக்குப் போதிக்கச் சென்றார். உடல்நிலை சரியில்லாததால் மீண்டும் இத்தாலிக்கே திரும்பினார். போர்லி என்னுமிடத்தில் அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கி அங்குள்ள பேராலயத்தில் மறையுரையாற்றினார். அன்றுமுதல் அந்தோனியார் புகழ் பெற்ற பிரசங்கியானார். அதன்பின் பதுவை நகரில் திருமறை சார்ந்த பணிசெய்து மறையுரையாற்றினார். அவரின் மறையுரையை கேட்க ஆலயங்களில் இடம் கொள்ளவில்லை. கிறிஸ்தவ கோட்பாடுகளை விளக்கியும், அந்த நாட்களில் நிலவிய தப்பறைக் கொள்கைகளை எதிர்த்தும் ஆணித்தரமாகப் போதித்தார்.
தாம் வாழ்ந்த காலத்திலும், இறப்பிற்குப் பின்னும் கடவுள் அளித்த கொடையினால் அனேக புதுமைகள் செய்தார். இதனால் «கோடி அற்புதர்» என்ற சிறப்புப் பெயரைப் பெற்றார்.
அந்தோனியாரின் அதிசயப் பண்புகள் மற்றும் அவர் புரிந்த புதுமைகள் பற்றி பல நிகழ்வுகள் உள்ளன. ஒருமுறை, இவர் ரீமினி என்னும் கடற்கரை நகரில் போதித்ததைக் கேட்க சிலர் மறுத்தபோது, மீன்கள் நீரின் மேல் வந்து இவர் கூறியதைக் கேட்டுக் கொண்டிருந்தனவாம். இன்னொரு முறை யூதர் ஒருவர் இயேசு நற்கருணையில் இருப்பதை மறுத்தாராம். ஆனால் பட்டினி போடப்பட்ட அவரது கழுதை, அதற்குமுன் போடப்பட்ட புல்லைத் தின்னாமல் அந்தோனியாரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நற்கருணையின் முன் மண்டியிட்டு ஆராதித்ததாம்.
மற்றுமொறு புதுமை:
இவர் வாழ்ந்த காலத்தில் கடவுளுடைய கிருபையால் இவர் செய்த புதுமைகளால் ஈர்க்கப்பெற்று இவரை நாடிவருவோர் எண்ணிக்கை அதிகமானதால் துறவியர்கள் மடத்தில் அமைதிக்குக் குந்தகம் ஏற்பட்டதாம். இதன் பொருட்டு மடத்தின் தலைமை குரு இவர் எண்ணிலடங்கா புதுமைகள் செய்ய தடைவிதித்தார். நாள் ஒன்றுக்கு 13 புதுமைகளுக்கு அதிகமாக புதுமைகள் செய்ய தடை விதித்து கட்டளையிட்டார். ஒருநாள், இவர் அன்றைய தினம் செய்யகூடிய 13 புதுமைகளையும் செய்து முடித்தபின்னர், மாலையில் வெளியே உலாவச் சென்றார். அப்பொழுது உயரமான கட்டடத்திலிருந்து ஒருவர் தவறி விழுந்த வேளையில் «அந்தோனியாரே என்னை காப்பாற்றும்» என்று உதவிக்குரல் எழுப்ப, இவர் அவரை வானத்திலேயே அந்தரத்தில் தொங்க வைத்ததாகவும், அருகில் இருந்த மடத்திற்கு சென்று தலைமை குருவிடம் 14வது புதுமை செய்ய அனுமதி பெற்று அவரை தரையில் பத்திரமாக இறக்கினாராம். மற்றொரு புதுமையில், ஒரே நேரத்தில் அந்தோனியார் இரு இடங்களில் போதித்ததாகவும் புதுமைகள் செய்ததாகவும் செய்தி உண்டு.
புனைவுகளை நீக்கிவிட்டு, வரலாற்று நிகழ்வுகளை மட்டுமே பார்த்தாலும் புனித அந்தோனியார் எண்ணற்ற புதுமைகள் செய்தார் என்பது உண்மையே என்று அவரது அதிகாரப்பூர்வமான வரலாறு கூறுகின்றது.
இறப்பு :
கி.பி. 1231ம் ஆண்டு பல ஊர்களில் மறையுரை ஆற்றியதாலும், கடும் தவ முயற்சிகளாலும் நோய்வாய்ப்பட்டார். அதே ஆண்டில் ஜீன் மாதம் 13ம் நாள் இறுதி திருவருட்சாதனங்களைப் பெற்றபின் இறந்தார். அப்போது அவருக்கு வயது 35. அதன் பின் 336 ஆண்டுகளுக்குப் பின் அவருடைய கல்லறையானது தோண்டப்பட்டபோது, அவருடைய நாக்கு மட்டும் அழியாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நாக்கு இன்றும் பதுவை நகர் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்தோனியார் இறந்து ஓராண்டு நிறைவதற்கு முன்னரே அவர் புனிதர் என்று திருச்சபையால் அறிவிக்கப்பட்டார்.
1946ம் ஆண்டு, வணக்கத்துக்குரிய திருத்தந்தை 12ம் பயஸ் (Venerable Pope Pius XII), புனிதர் அந்தோனியாரை திருச்சபையின் மறைவல்லுநர்களில் ஒருவராக அறிவித்தார்.

Ctrl+C புனிதர்கள் வரலாறு